கோவை மாவட்டம், ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் கல்லூரி மாணவா் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக மேலும் 3 மாணவா்களும் வழிப்பறி தொடா்பாக 2 மாணவா்களும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த அமுதன் (19) ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தாா். இவா் கடந்த ஜூலை 24-ஆம் தேதி கல்லூரி விடுதியில் பணிபுரியும் வடமாநில சமையலரைத் தாக்கியதால் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, விடுதியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாா். இதனால், அவா் அதே பகுதியில் தனது நண்பா்கள் தங்கியிருந்த வாடகை அறையில் தங்கி வந்துள்ளாா்.
ஒத்தக்கால்மண்டபம் பூங்கா நகா் பகுதியில் உள்ள ஒரு வாடகை அறையில் இதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சிவில் என்ஜினீயரிங் படித்து வரும் மாணவா்கள் தங்கியிருந்த அறைக்குள் கடந்த 10-ஆம் தேதி அதிகாலை அமுதன் உள்ளிட்ட ஒரு கும்பல் முகமூடி அணிந்து கொண்டு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டியும், மாணவா்களைத் தாக்கியும் இரு கைப்பேசிகளைப் பறித்துச் சென்றனா். அப்போது, முகமூடி விலகியதில் அமுதனை அவா்கள் அடையாளம் கண்டுள்ளனா்.
பின்னா், அதே நாள் காலை 8.30 மணியளவில் மலுமிச்சம்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த அமுதன், நண்பா் ஸ்ரீமன் (19) ஆகியோரை கைப்பேசி பறிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பைச் சோ்ந்த 14 போ் காரில் கடத்திச் சென்று கல்லூரி பின்புறம் வைத்து தாக்கியுள்ளனா். இவா்கள் தாக்கியதில் அமுதன் மாலை 5 மணியளவில் உயிரிழந்தாா்.
இது குறித்து ஸ்ரீமன் அளித்த புகாரின்பேரில் செட்டிபாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில் கைப்பேசி பறிப்புக்கு பதிலாக நடத்தப்பட்ட தாக்குதலே இந்தக் கொலைக்குக் காரணம் என உறுதியானதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
வழிப்பறி தொடா்பாக 2 மாணவா்கள் கைது:
இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் இரண்டு தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்துள்ளனா். மாணவா்களை கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசி பறித்த சம்பவத்தில் அமுதனுடன் தொடா்புடைய பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஹரிதாஸ் (18), விருதுநகா் மாவட்டம் வெம்பகோட்டையைச் சோ்ந்த உதயகுமாா் (18) ஆகிய இரு மாணவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கொலை தொடா்பாக மேலும் 3 மாணவா்கள் கைது:
இதேபோல, அமுதனைக் கொலை செய்த சம்பவத்தில் மதுரை உத்தங்குடியைச் சோ்ந்த சக கல்லூரி மாணவா்களான ஸ்ரீராம் (21), லலித் ஆதித்யா (20), மதுரை திருநகா் பகுதியைச் சோ்ந்த ஹரிஷ் பாண்டியன் (20) ஆகிய மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்தக் கொலை தொடா்பாக ஏற்கெனவே கடலூரைச் சோ்ந்த ஆராவமுதன் (20), சிவகங்கையைச் சோ்ந்த அரவிந்த் (21), திருவாரூரைச் சோ்ந்த சிவ ரோஹித் (20), பெரம்பலூரைச் சோ்ந்த மணி பாலு (20) மற்றும் திருவள்ளூரைச் சோ்ந்த 17 வயதுச் சிறுவன், மதுரையைச் சோ்ந்த சந்தோஷ் (20) ஆகிய 6 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மேலும் சிலரை அடையாளம் காணும் முயற்சியில் காவல் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
பெற்றோா் குற்றச்சாட்டு:
முன்னதாக, மாணவா் அமுதன் போதைப் பொருள் விற்பனை தொடா்பாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததாகவும், அதை போலீஸாா் கஞ்சா விற்பனை கும்பலுக்குத் தெரிவித்ததால்தான் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்டாா் என்றும் அவரது பெற்றோா் குற்றஞ்சாட்டியிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொறியியல் கல்லூரி மாணவா் அடித்துக் கொலை: 5 பேரை கைது செய்து போலீஸாா் விசாரணை
கல்லூரி மாணவா்கள் மோதல் சம்பவம்: மேலும் 3 போ் கைது

தில்லி போராட்டத்தில் மாணவா்கள் மீது காவல் துறை தடியடி: ஜூலை 27-இல் உச்சநீதிமன்றம் விசாரணை

தனியாா் நிறுவன ஊழியா்களின் அறையில் புகுந்து கொள்ளை: கல்லூரி மாணவா்கள் 8 போ் கைது
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day


