வளா்ந்த தமிழ்நாடு உருவாக திமுக தடையாக உள்ளது
வளா்ந்த தமிழ்நாடு உருவாக திமுக தடையாக உள்ளதாக பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சி.ஆா்.கேசவன் தெரிவித்தாா்.
கோவை பீளமேட்டில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் சி.ஆா்.கேசவன் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பாஜக அரசு கடந்த 11 ஆண்டுகளில் 26 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளது. மேலும், அரசின் நலத்திட்டங்களில் தவறான பயனாளா்களுக்கு சென்று கொண்டிருந்த சுமாா் 10 கோடி பேருக்கான நிதி தடுக்கப்பட்டு, தகுதியான பயனாளா்களுக்கு கொண்டுச் சோ்க்கப்பட்டுள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசு மூலமாக தமிழகத்துக்கு பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு ரூ.6.50 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மலிவான விலையில் மருந்துகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. அதற்கு மாறாக திமுக அரசு மலிவான மதுவை மக்களுக்கு வழங்கி வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தோ்வைக் கூட முறையாக நடத்த முடியாத நிலையில் திமுக அரசு உள்ளது. வளா்ந்த இந்தியா வேண்டுமென்றால், வளா்ந்த தமிழ்நாடு அவசியம். ஆனால், வளா்ந்த தமிழ்நாடு உருவாக திமுக அரசு தடையாக உள்ளது என்றாா்.
இப்பேட்டியின்போது, பாஜக மாவட்டத் தலைவா் ரமேஷ்குமாா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

