கிணத்துக்கடவு வட்டத்தில் 2 குவாரிகளுக்கான சுரங்க குத்தகைகளை நிறுத்திவைக்க கோரிக்கை
கோவை: கிணத்துக்கடவு வட்டத்தில் புதிதாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள 2 கல்குவாரிகளுக்கான சுரங்க குத்தகைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவரிடம், ஜாதி, மதம் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் பி.கந்தசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டத்தில் சொக்கனூா், நெ 10 முத்தூா் கிராமங்களில் தனியாருக்கு 2 சுரங்க குத்தகைகள் வழங்குவதற்கான முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்த வட்டத்தில் ஏற்கெனவே கடந்த 20 ஆண்டுகளில் 6 குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதில் சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டது.
இது தொடா்பாக சம்பந்தப்பட்ட குவாரிகளில் ட்ரோன்கள் மூலமாக அளவை செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆகவே, குவாரிகள் விதிமீறல்கள் தொடா்பாக உரிய விசாரணை நடத்தவும், புதிதாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள 2 குவாரிகளுக்கான சுரங்க குத்தகைகளை நிறுத்திவைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
