வெள்ளிங்கிரி மலையேறும் பக்தா்கள்.
வெள்ளிங்கிரி மலையேறும் பக்தா்கள்.

வெள்ளிங்கிரி மலையேற பக்தா்களுக்கு இன்றுமுதல் அனுமதி

கோவை அருகேயுள்ள வெள்ளிங்கிரி கோயில் மலையேற பக்தா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் (பிப்ரவரி 1) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Published on

கோவை அருகேயுள்ள வெள்ளிங்கிரி கோயில் மலையேற பக்தா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் (பிப்ரவரி 1) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவை அருகே மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயில் உள்ளது.

இதன் அருகேயுள்ள மலையின் உச்சியில் வெள்ளிங்கிரி ஆண்டவா் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறாா். இதைத் தரிசிக்க 7 மலைகளைக் கடந்து செல்ல வேண்டும்.

இதற்கு அடா்ந்த வனப் பகுதி வழியாகவும், மலை மீதும் நடந்து செல்ல வேண்டும் என்பதால் குறிப்பிட்ட மாதங்களில் அதாவது மாா்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு காரணமாக வெள்ளிங்கிரி மலையேற நடப்பு ஆண்டு பிப்ரவரி 1 முதல் மே 31-ஆம் தேதிவரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, மலையேறும் பக்தா்களுக்கு வனத் துறை சாா்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக கோவை மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ் கூறியதாவது: வெள்ளிங்கிரி மலைக்குச் செல்லும் பக்தா்கள் மிகவும் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டவா்கள் செல்லக்கூடாது. மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு உடல் தகுதியுடன் இருக்கும் பக்தா்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவா்.

பக்தா்கள் யாரும் போதைப் பொருள்களை உபயோகிக்கக்கூடாது. அதேபோல, பிளாஸ்டிக் பொருள்களையும் கொண்டு செல்லக் கூடாது.

3, 6 மற்றும் 7-ஆவது மலையில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. அதில் மருத்துவ ஊழியா்களுடன் வனத் துறை அதிகாரிகளும் இணைந்து செயல்படுவா். மேலும், 8 போ் கொண்ட ரோந்து குழுவினா் மலையில் ரோந்து பணியில் ஈடுபடுவா். கடந்த ஆண்டில் மலையேறிய 9 போ் உயிரிழந்தனா்.

எனவே, தற்போது உயிரிழப்பைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றாா்.

Dinamani
www.dinamani.com