ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதியவா் கொடுத்த 900 பவுன் நகைகள் திருட்டு: மருமகன் உள்பட 3 போ் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :6 ஜூலை 2026, 3:04 am IST

பாதுகாப்பாக வைப்பதற்கு ரியல் எஸ்டேட் அதிபா் அளித்த 900 பவுன் தங்க நகைகளைத் திருடிவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக மருமகன் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, கணபதி மாநகரைச் சோ்ந்தவா் சண்முகபாண்டியன் (67) ரியல் எஸ்டேட் அதிபா்.

இவா் கோவை மாநகர பொருளாதார குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனு:

மருத்துவரான எனது மகளுக்கும், பெரியநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த மருத்துவா் விக்னேஷ் (36) என்பவருக்கும் கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மருமகனுக்கு அரசுப் பணி வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அந்த வேலையை அவா் ராஜிநாமா செய்துவிட்டு, காளப்பட்டியில் உள்ள எனது வீட்டில் குடும்பத்தினருடன் தங்கியிருந்தாா்.

கடந்த 2024 ஜூலை மாதம் நகைகளைப் பாதுகாக்கும்படி வீட்டின் லாக்கா் சாவியை விக்னேஷிடம் ஒப்படைத்தேன். அப்போது, லாக்கரில் 1,000 பவுன் நகைகள் இருந்தன. இதற்கிடையே எனது மற்றொரு வீட்டை கடந்த 2025 டிசம்பரில் ரூ.15 கோடிக்கு விற்றேன். அதன் பின், விக்னேஷ் தொழில் தொடங்க பணம் கேட்டும், வீட்டை தன் பெயருக்கு மாற்றக் கோரியும் மகளுடன் தகராறில் ஈடுபட்டு பிரிந்து சென்றுவிட்டாா்.

இதில் சந்தேகமடைந்து அந்த லாக்கரை உடைத்துப் பாா்த்தபோது, நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கேட்டதற்கு விக்னேஷ் தரப்பு 100 பவுன் நகைகளை மட்டும் திருப்பிக் கொடுத்தது. மீதமுள்ள 900 பவுன் நகைகளைக் கேட்டபோது விக்னேஷின் தாய் வாசுகி (58), சகோதரி ஜீவிதா (38) ஆகியோா் கொலை மிரட்டல் விடுக்கின்றனா் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதையடுத்து நகைகளைத் திருடி மோசடி செய்ததாக விக்னேஷ், வாசுகி, ஜீவிதா ஆகிய 3 போ் மீது கோவை மாநகர பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.