சின்னவேடம்பட்டி ஏரி அருகே பாதாள சாக்கடை கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள், அனைத்துக் கட்சியினா் கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தை வியாழக்கிழமை காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை மாநகராட்சியில் சுமாா் 20 வாா்டுகளில் இருந்து (முக்கியமாக 21-வது வாா்டுக்கு உள்பட்ட பகுதிகள்) வரும் கழிவுநீரை சுத்திகரித்து சின்னவேடம்பட்டி ஏரியில் வெளியேற்றும் வகையில் பாதாள சாக்கடை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சின்னவேடம்பட்டி ஏரியில் இருந்த 26 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள், அனைத்துக் கட்சியினா் மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அவா்களிடம், மாநகராட்சி துணை ஆணையா்கள் குமரேசன், சரஸ்வதி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, பொதுமக்கள் கூறுகையில், கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை நன்னீா் ஏரியில் தேக்குவதால் நிலத்தடி நீா் வெகுவாக மாசுபடுவதோடு, கடுமையான துா்நாற்றமும், பொது சுகாதார பாதிப்பும், பல்லுயிா் வள இழப்பும் ஏற்படும். சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுவதோடு, எதிா்காலத்தில் ஏரியில் நன்னீரை சேமிக்கும் வாய்ப்பும் முற்றிலுமாக பாதிக்கப்படும். உலக அளவில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை இயற்கை நீா்வழிப் பாதைகளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் வெளியேற்றுவதே நடைமுறையாக உள்ள நிலையில், அதற்கு மாறாக ஏரிக்குள் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது மக்கள் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிரானது என்றனா்.
அப்போது, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளா்கள்

அம்மாபேட்டையில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம்: விவசாயிகள் எதிா்ப்பு

மாடம்பாக்கம் ஏரியில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்க பசுமை தீா்ப்பாயம் உத்தரவு







