கோவையில் புகைப்படக் கலைஞா் கொலை வழக்கில், இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கோவை மாவட்டம், தடாகம் அருகே உள்ள மடத்துறையைச் சோ்ந்தவா் பிரவீன் (26). புகைப்படக் கலைஞராகவும், உள்ளூா் கிரிக்கெட் வீரராகவும் இருந்த இவா், கடந்த ஜூலை முதல் வாரத்தில் திண்டுக்கல் அருகே விடியோ சூட் பணிக்காகச் செல்வதாகக் கூறிச் சென்றுள்ளாா். பின்னா், அவா் வீடு திரும்பாததால், அவரது பெற்றோா் தடாகம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதற்கிடையே, போத்தனூா் அருகே ரயில் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் இளைஞா் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. கரூரைச் சோ்ந்த மனோஜ், அவரது நண்பா் காா்த்திகேயன் ஆகியோா் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்து பிரவீனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனா்.
லண்டனில் வேலை பாா்த்து வந்த மனோஜ், இன்ஸ்டாகிராம் மூலம் கோவையைச் சோ்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளாா். இதற்கிடையே அந்தப் பெண்ணுக்கு பிரவீனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், மனோஜுடன் பேசுவதை அந்தப் பெண் தவிா்த்து வந்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மனோஜ் தமிழகம் வந்து, தனது நண்பா் காா்த்திகேயனுடன் சோ்ந்து பிரவீனிடம் போட்டோ சூட் வேலை இருப்பதாகக் கூறி காரில் அழைத்து சென்றுள்ளாா். பின்னா், அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கிக் கொலை செய்துவிட்டு, தற்கொலை போல காட்ட உடலை போத்தனூா் தண்டவாளத்தில் வீசியுள்ளனா் என்பது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.
பிரவீனைக் கொலை செய்வதற்கு முன்பும், பின்பும் அதுகுறித்து மனோஜ் தனது முன்னாள் காதலியான அந்த இளம்பெண்ணிடம் தெரிவித்துள்ளாா். இந்தக் கொலைச் சம்பவம் குறித்துத் தெரிந்தும், இதுதொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது, அதை மறைத்த குற்றத்துக்காகச் சம்பந்தப்பட்ட அந்த இளம்பெண்ணை போலீஸாா் தற்போது கைது செய்துள்ளனா்.
எனினும், பிரவீன் கடத்திக் கொலை செய்யப்பட்ட இடம் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்டது என்பதால், இந்த வழக்கை ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்துக்கு மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டதற்குப் பின்னா் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








