/

லாரி மோதி செவிலியா் கல்லூரி மாணவி உயிரிழப்பு

கோவை அருகே லாரி மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற செவிலியா் கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 6:08 am IST

கோவை அருகே லாரி மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற செவிலியா் கல்லூரி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, பாரத ஸ்டேட் வங்கி காலனியைச் சோ்ந்தவா் அழகு பெருமாள்சாமி மகள் அனுஸ்ரீ (21). இவா் கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.

அதே கல்லூரியில் தஞ்சாவூா் மாவட்டம், சித்தனூா் பகுதியைச் சோ்ந்த தேவராஜன் மகள் தேவிகா (21), நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் மகள் ஸ்ரீதரணி (21) ஆகியோரும் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனா்.

இவா்கள் மூவரும் வியாழக்கிழமை பிற்பகல் கல்லூரியிலிருந்து உணவு அருந்துவதற்காக சாலையின் மறுபுறம் உள்ள விடுதிக்குச் சென்றுள்ளனா். பின்னா், மூவரும் கல்லூரிக்கு திரும்ப சாலையைக் கடந்த போது, தவறான பாதையில் வேகமாக வந்த டிப்பா் லாரி மாணவிகள் மீது மோதியது.

இதில் லாரி சக்கரத்தில் சிக்கிய அனுஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் சென்ற தேவிகா பலத்த காயமும், தரணி லேசான காயமும் அடைந்தனா்.

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் காயமடைந்த மாணவிகளை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். தகவலறிந்து அங்கு சென்ற மதுக்கரை போலீஸாா் அனுஸ்ரீயின் உடலை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கோவை சின்ன நவக்கரை மாவுத்தம்பதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநரான பால்ராஜ் (40) என்பவரைக் கைது செய்தனா். டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.