கடந்த சில நாள்களாக கோவையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், சீராக மின் விநியோகம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மின்வெட்டு தொடா்பான அறிவிப்புகள், அந்தந்த துணை மின் நிலையம் சாா்பில் முன்கூட்டியே வெளியிடப்பட்டு வருகின்றன. மின்வெட்டு நாளை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் தொழில்துறையினா் மாற்று ஏற்பாடுகள் செய்துகொள்கின்றனா். ஆனால், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தினமும் முன்னறிவிப்பின்றி பகல், இரவு நேரங்களில் 1 முதல் 2 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது.
மாவட்டத்தில் சூலூா், அன்னூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள், மாநகரில் ஒண்டிபுதூா், சிங்காநல்லூா், சரவணம்பட்டி, கணபதி, செல்வபுரம், உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் தொழில்துறையினா், மக்கள் கடும் அவதிக்குள்ளாவதுடன் குடிநீா் விநியோகமும் பாதிக்கப்படுகிறது.
பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் மின்வெட்டு ஏற்படும்போது முதியவா்கள், குழந்தைகளுக்கு சிரமமான சூழல் ஏற்படுவது தவிா்க்க முடிவதில்லை. கடந்த சில வாரங்களில் அதிக அளவு மின்வெட்டு ஏற்படுகிறது. சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள், நுகா்வோா் அமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘பராமரிப்புப் பணிக்காக மட்டுமே சிறிது நேரம் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. பல மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுவதில்லை. மின்வெட்டு புகாா் மீது உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றனா்.








