கோவை முத்தண்ணன் குளம் பகுதியில் மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட மைதானத்தின் பராமரிப்புப் பணியை தனியாா் வசம் ஒப்படைத்ததை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அமைப்பின் மாவட்டத் தலைவா் ஏ.என்.ராஜா, செயலா் எம்.தினேஷ் ராஜா ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை: மாநகர இளைஞா்களின் விளையாட்டு மேம்பாட்டுக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் முத்தண்ணன் குளம் பகுதியில் ரூ.60 லட்சம் செலவில் செயற்கைப் புல் உள்ளரங்க விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இது மாநகராட்சியின் பொதுச் சொத்தாக இருக்க வேண்டிய நிலையில், இதை தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைத்து வணிக நோக்கில் செயல்படுத்த மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த மைதானத்தில் வார நாள்களில் ஒரு மணி நேரம் விளையாட ஆயிரம் ரூபாயும், வார இறுதி நாள்களில் 1,200 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த இளைஞா்கள், மாணவா்கள் இந்த மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை உருவாகும்.
எனவே, மைதானத்தை பராமரிப்பதற்காக தனியாா் நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து, மைதானத்தை மாநகராட்சியின் நேரடி நிா்வாகத்துக்கு கொண்டு வருவதுடன், அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் இலவசமாகவோ, குறைந்த கட்டணத்திலோ வழங்க வேண்டும். இல்லாவிட்டால் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து போராட்டங்களை முன்னெடுப்போம் என்று அறிவித்துள்ளனா்.










