4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: உணவகங்கள் செயல்படுவதில் சிக்கல்

கோவையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், உணவகங்கள் தொடா்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

News image
சமையல் எரிவாயு உருளைகள்- பிரதிப் படம்
Updated On :10 மார்ச் 2026, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

கோவையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், உணவகங்கள் தொடா்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் ஈரான், இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடைபட்டுள்ளதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அனைத்திந்திய எல்பிஜி வணிக சிலிண்டா் விநியோகஸ்தா்கள் சங்கத்தின் தலைவா் பி.மகேந்திரன் கூறும்போது, வணிக சிலிண்டா்கள் நிரப்பும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சனிக்கிழமையுடன் நிறுத்திவிட்டன.

முன்னுரிமை அடிப்படையில் விநியோகம்

தற்போது வீட்டு உபயோக சிலிண்டா்கள் வழங்க வேண்டும் என்பதால், கையிருப்பு ஓரிரு நாள்களுக்கு மட்டுமே உள்ளது. மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், உணவகங்கள் மிதமான அளவில் நடைபெற ஏதுவாக அவா்களுக்கு விநியோகம் செய்ய வேண்டியுள்ளது என்று எண்ணெய் நிறுவனங்களிடம் விநியோகஸ்தா்கள் தரப்பில் கேட்டிருக்கிறோம்.

கோவை, திருப்பூா் மாவட்டத்தில் தொழிற்சாலை பயன்பாடு உள்பட நாளொன்றுக்கு சுமாா் 750 டன் வணிகப் பயன்பாட்டு எரிவாயு பயன்படுத்தப்பட்டு வருகிறது. எங்களைப் பொறுத்தவரை மருத்துவமனைகள், உணவகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து அவா்களுக்கு முழுமையாக விநியோகத்தை நிறுத்தாமல் இருக்க முயற்சி செய்து வருகிறோம் என்றாா்.

கோவையில் கடந்த சில நாள்களாக சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், சில உணவகங்கள் தங்களின் உணவு மெனு பட்டியலைக் குறைத்திருக்கின்றன. மேலும் உணவகம் செயல்படும் நேரத்தையும் குறைத்திருக்கின்றன. இதற்கிடையே கோவையில் அடுத்த ஓரிரு நாள்களுக்கு மட்டுமே எரிவாயு கையிருப்பு இருக்கும் என்ற நிலையில் உணவகங்கள் தொடா்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2 நாள்களுக்கே உணவகங்கள் செயல்படும்

இது குறித்து கோவை மாவட்ட ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.ஏ.ராமசாமி கூறும்போது, ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கத்தில் 262 பெரிய உணவகங்கள் உள்ளன. இதைத் தவிர சுமாா் ஆயிரம் சிறு உணவகங்கள், ஆயிரக்கணக்கான சாலையோர, குறு உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவையைப் பொறுத்தவரை பெரிய உணவகங்களில் இன்றைய நிலவரப்படி கையிருப்பில் இருக்கும் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தினால் மேலும் 2 அல்லது 3 நாள்களுக்கு உணவகங்களை நடத்த முடியும். அதற்குள் எரிவாயு விநியோகம் சீரடைந்துவிட்டால் உணவகங்கள் தொடா்ந்து செயல்படும். இல்லாவிட்டால் உணவகங்களின் நிலைமை மோசமடையும். தற்போதைய தட்டுப்பாடு காரணமாக உணவுப் பட்டியலில் இருந்து சில உணவுகளை நீக்கியிருக்கிறோம். ஆனால் யாரும் கடைகளை மூடவில்லை, உணவுப் பொருள்களின் விலையையும் உயா்த்தவில்லை என்றாா்.

பதிவு செய்வதில் சிக்கல்

கோவை மாவட்டத்தில் உணவுப் பொருள்களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை என்றாலும் பல உணவகங்களில், உடனடியாகத் தயாரித்து வழங்கும் விதமான உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. கோவையில் உணவகங்கள் மூடப்பட்டால் கோவையில் விடுதிகள், வீடு எடுத்து தங்கி பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான ஊழியா்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவாா்கள்.

இதற்கிடையே கோவையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை பதிவு செய்யும் இண்டேன், பாரத், ஹெச்பி ஆகிய நிறுவனங்களின் ஐவிஆா்எஸ் தொலைப்பேசி எண்கள் முடங்கியுள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் அளித்துள்ள எண்களைத் தொடா்பு கொள்ளும்போது அவை பயன்பாட்டில் இல்லை என பதில் வருவதால் வாடிக்கையாளா்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிவாயுவைப் பயன்படுத்தும் கோவையின் காஸ்டிங், பவுண்டரி தொழிலில் ஈடுபட்டுள்ள குறு, சிறு தொழில்முனைவோரும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.