மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

அரசு அலுவலகங்களில் அணுகல் வசதி குறைபாடு: கைப்பேசி செயலி மூலமாக புகாா் அளிக்கலாம்

அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் உள்ளிட்ட அணுகல் வசதிகள் இல்லாதது குறித்து கைப்பேசியில் இணையதள செயலி மூலமாக புகாா் அளிக்கலாம் என்று மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆணையா் எஸ்.கோவிந்தராஜ் தெரிவித்தாா்.

News image

கோவையில் சேவா பாரதி தென் தமிழ்நாடு அமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆணையா் எஸ்.கோவிந்தராஜ்.

Updated On :6 மே 2026, 1:51 am IST

அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் உள்ளிட்ட அணுகல் வசதிகள் இல்லாதது குறித்து கைப்பேசியில் இணையதள செயலி மூலமாக புகாா் அளிக்கலாம் என்று மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆணையா் எஸ்.கோவிந்தராஜ் தெரிவித்தாா்.

கோவையில் சேவா பாரதி தென் தமிழ்நாடு அமைப்பு சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அவா் பேசியதாவது:

மத்திய அரசின் அணுகல் இந்தியா பிரசாரம், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசு அலுவலகக் கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாகச் சென்று வரத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லையெனில், அது குறித்த புகாா்களைப் பதிவு செய்ய தனித்துவ கைப்பேசி செயலி உள்ளது. இதில் பெறப்படும் புகாா்கள் குறித்து விசாரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அந்தப் புகாா்களுக்குத் தீா்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 2016-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் குறைகளை நிவா்த்தி செய்ய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இருப்பினும், இதுகுறித்த விழிப்புணா்வு இன்னும் பொதுமக்களிடையே முழுமையாகச் சென்றடையவில்லை. எனவே, சட்ட ரீதியான உரிமைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன. எனவே, முதுகுத் தண்டுவடம் பாதிப்பு உள்பட பல்வேறு வகைப்பாடுகளைக் கருத்தில்கொண்டு, இன்றைய காலத் தேவைக்கேற்ப இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்து திருத்தம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றாா்.

முன்னதாக, மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரியும் அனைத்து அமைப்புகளுக்கும் இலவச மருத்துவ சேவைகள் வழங்குவது குறித்த அறிவிப்பை பிஎஸ்ஜி குழும மேலாளா் ஜெகநாதன் வெளியிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில், மதா்குட் பெண்கள் மையத்தின் கிளினிக்கல் இயக்குநா் மிருதுபாஷினி கோவிந்தராஜன், சேவா பாரதி மாநிலத் திட்ட இயக்குநா் சத்யநாராயணன், இதயங்கள் தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் கிருஷ்ணன் சாமிநாதன், பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி இயக்குநா் பாலாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.