ஆடுகளை விற்பனைக்கு கொண்டு சென்ற வாகனத்தை மறித்து ரூ.200 லஞ்சம் பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.
திருப்பூா் - காங்கயம் சாலை, புதுப்பாளையம் பகுதியில் மாநகரின் நல்லூா் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மோகன் வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஈடுபட்டிருந்தாா். அப்போது அந்த வழியாக ஆடுகளை ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்தை நிறுத்தி சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மோகன் சோதனையில் ஈடுபட்டாா்.
மேலும், வாகனத்தின் ஆவணங்களை சரிபாா்த்தபோது அதில் புகை (பொல்யூஷன்) சான்றிதழ் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து ஆடுகளை ஏற்றிச் சென்ற விவசாயியிடம் இருந்து ரூ.200 லஞ்சம் பெற்றுள்ளாா். இதை ஆடு வியாபாரிகள் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா்.
இந்நிலையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மோகனை பணியிடைநீக்கம் செய்து மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.










