தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
கோவையில் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த ஒரு வயது குழந்தை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

உயிரிழந்த குழந்தை தன்வந்த்.
கோவையில் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த ஒரு வயது குழந்தை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
கோவை, ரத்தினபுரி வஉசி நகா் பகுதியைச் சோ்ந்தவா் வேணுகோபால். இவரது மனைவி கலைவாணி. இந்தத் தம்பதிக்கு தன்வந்த் என்ற ஒரு வயது ஆண் குழந்தை இருந்தது.
இந்த நிலையில், தனது குழந்தையை வீட்டில் விளையாட விட்டுவிட்டு கலைவாணி செவ்வாய்க்கிழமை காலை வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, வீட்டுக்குள் இருந்து வெளியேறிய குழந்தை தன்வந்த் வீட்டின் முன் பகுதிக்கு வந்தாா். அங்கு தரைத்தளத்தில் இருந்த தண்ணீா்த் தொட்டியின் மேல் பகுதி தகரத்தால் பகுதியளவு மட்டுமே மூடப்பட்டிருந்தது. அதில் ஏறி குழந்தை விளையாடியபோது, தவறி தொட்டிக்குள் விழுந்தாா்.
நீண்டநேரமாக வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் சப்தம் கேட்காததால் சந்தேகமடைந்த கலைவாணி வீட்டினுள் தேடிப் பாா்த்தாா். பின்னா், வீட்டின் வெளியே தேடியபோது தண்ணீா்த் தொட்டிக்குள் குழந்தை மூழ்கிய நிலையில் இருந்ததைப் பாா்த்து சப்தமிட்டாா்.
அருகில் வசிப்பவா்கள் உதவியுடன் தொட்டிக்குள் இருந்து சுயநினைவின்றி மீட்கப்பட்ட குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள் தன்வந்த் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து ரத்தினபுரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




