
மதுக்கூட உரிம விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை: மாவட்ட எஸ்.பி. பவன்குமாா் ரெட்டி எச்சரிக்கை
அரசால் விதிக்கப்பட்டுள்ள மதுக்கூட உரிம விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி எச்சரித்துள்ளாா்.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி.
அரசால் விதிக்கப்பட்டுள்ள மதுக்கூட உரிம விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி எச்சரித்துள்ளாா்.
கோவை மாவட்டக் காவல் எல்லைக்குள்பட்ட எஃப் எல்-2, எஃப் எல்-3 மதுக் கூடங்களின் உரிமையாளா்கள் மற்றும் நிா்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி பேசியதாவது:
மதுக்கூடங்களின் உரிமையாளா்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாத வகையில் பொறுப்புடன் செயல்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மதுக் கூடங்களில் உறுப்பினா்கள் அல்லாத நபா்களுக்கும், 21 வயதுக்குள்பட்ட நபா்களுக்கும் எக்காரணம் கொண்டும் மதுபாட்டில் வழங்கக்கூடாது.
குறிப்பாக, வெளி மாநிலங்களைச் சோ்ந்த உறுப்பினா் அல்லாத நபா்கள் தொடா்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உறுப்பினா் விவரங்கள் அடங்கிய பதிவேடுகளை முறையாக பராமரித்து, அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். மதுக்கூட வளாகம் அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏதேனும் தகராறு, சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் அல்லது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால், அதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்க வேண்டும்.
மதுக் கூடத்தின் உள்புறம், வெளிப்புறம், நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களும் முழுமையாகப் பதிவாகும் வகையில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, எப்போதும் இயங்கும் நிலையில் பராமரிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட வளாகத்துக்குள் அருந்துவதற்காக வழங்கப்படும் மதுபாட்டில்களை எக்காரணம் கொண்டும் வெளிப்புறத்துக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது. மது விற்பனை தொடா்பான அனைத்து உரிம நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டும். விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






