தீபாவளி காரணமாக ஈரோடு கால்நடைச் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன், வியாழக்கிழமைகளில் மாட்டுச் சந்தை நடந்து வருகிறது. அதன்படி, இந்த வாரம் வியாழக்கிழமை நடந்த சந்தைக்கு விற்பனைக்காக 100 கன்றுக் குட்டிகள் கொண்டு வரப்பட்டன. இவைகள் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரை விற்பனையானது.
250 பசுக்கள், 200 எருமைகள் என மொத்தம் 450 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில், எருமை குறைந்தபட்ச விலையாக ரூ. 18 ஆயிரம் முதல் ரூ. 34 ஆயிரம் வரையிலும், பசு ரூ. 16 ஆயிரம் முதல் ரூ. 32 ஆயிரம் வரை விற்பனையானது.
சென்னை, திருவண்ணாமலை, ஆத்தூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மகாராஷ்டிரம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர்.
இதுகுறித்து சந்தை மேலாளர் முருகன் கூறியதாவது:
தீபாவளி காரணமாக வியாழக்கிழமை 450 மாடுகள் கொண்டு வரப்பட்டன. ஆனால், வெளிமாநில வியாபாரிகள் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் மாடுகள் வாங்க வந்ததால் அவர்களுக்கு மாடுகள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் என்றனர்.
நிலவேம்புக் குடிநீர்: ஈரோடு மாவட்ட கறவை மாடுகள், வளர்ப்புக் கன்றுகள் வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் சந்தையில் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் கண்ணுசாமி தலைமை வகித்தார். சந்தைக்கு வந்த வியாபாரிகள், தரகர்கள், விவசாயிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் செயலாளர்கள் முருகன், பெத்தபெருமாள், துணைத் தலைவர் சண்முகம், நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.