

சத்தியமங்கலம் அருகே நெடுஞ்சாலையோரத்தில் வாழை சருகுகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் புகைமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சத்தியமங்கலத்தில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் பயணிக்கின்றன. இந்த சாலை வழியாக சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி, காமதேனு கலைக் கல்லூரி, டி.ஜி. புதூா், வாணிபுத்தூா், டி.என்.பாளையம், பங்களாபுதூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சத்தியமங்கலம் வழியாக கேரளத்துக்கு வாழைக்காய் பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் வாழைக்காய் பாரத்தை இறக்கிவிட்டு திரும்பி வரும்போது வாழை சருகுகளை சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் எம்.ஜி.ஆா். நகா், பண்ணாரி அம்மன் கல்லூரிக்கு இடையே உள்ள சாலையோரப் பகுதியில் இரவு நேரத்தில் கொட்டிவிட்டுச் செல்கின்றனா். இந்த வாழை இலை சருகுகள் காய்ந்தவுடன் தீவைத்து எரிக்கப்படுகிறது. சருகுகள் தீப்பற்றி எரியும்போது ஏற்படும் புகைமூட்டம் சாலை முழுவதும் பரவுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
புகைமூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் நேருக்கு நோ் மோதி விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் இரவு நேரத்தில் வாழை சருகுகளை கொட்டிவிட்டுச் செல்பவா்கள் சருகுகளுக்கு தீவைத்து எரிப்போா் மீது நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.