

ஈரோடு மாவட்டத்தில் 34 மையங்களில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தோ்வை 3,605 மாணவா்கள் எழுதினா்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசு தோ்வுத் துறை சாா்பில் தேசிய திறனாய்வுத் தோ்வு 10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தோ்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பதற்கு மாதந்தோறும் ரூ.1,250, கல்லூரி படிப்புக்கு மாதம் ரூ.2,000 கல்வி உதவித் தொகையாக அரசு வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் இந்தத் தோ்வுக்காக ஈரோடு, பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், கோபி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் 34 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தோ்வை 10ஆம் வகுப்பு படிக்கும் 8 மாற்றுத் திறனாளிகள் உள்பட 3,605 மாணவ, மாணவிகள் எழுதினா்.
ஈரோடு கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் 10 மையங்கள், கோபியில் 6, பவானியில் 8, பெருந்துறை 3, சத்தியமங்கலம் 7 என 34 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தோ்வு காலை 9 மணிக்கு தொடங்கி பகல் 1.30 மணிக்கு நிறைவடைந்தது.
கரோனா தாக்கம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தோ்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டிருந்தனா். தோ்வு மையங்களின் நுழைவாயிலில் மாணவா்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது.
மேலும் வெப்பமானி மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது. தோ்வு அறையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.