79 நாள்களுக்கு பிறகு ஈரோட்டில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயங்கத் தொடங்கின.
கரோனா வைரசை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பேருந்து போக்குவரத்து இல்லாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் தற்போது சென்னை உட்பட நான்கு மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பி வருவதால் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்க வருகிறது. இதன்படி கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தனியார் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது ஈரோடு மாவட்டத்தை பொறுத்த அளவு 270 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சேலம் மேட்டூர் அந்தியூர் கரூர் திருப்பூர் தாராபுரம் கோயம்புத்தூர் இப்படம் பல்வேறு வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதைப்போன்று உள்ளூரிலும் பஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் ஈரோடு மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பேருந்துகளில் ஏற்கனவே கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன.
இன்று காலை 6 மணி முதல் ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் தனியார் பேருந்துகள் மற்றும் உள்ளூர் செல்லும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் முகக்கவசம் அணிந்து இருந்தனர். பேருந்தில் பயணம் செய்ய வந்த பயணிகள் முகக்கவசம் அணிந்தால் தான் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதே போன்று ஏறும்போது பேருந்தின் பின் பகுதி படிக்கட்டில் தான் ஏற அனுமதிக்கப்பட்டனர். பயணிகள் ஏறும் போது அவர்கள் கைகளில் சானிடேசர் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
பேருந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பயணம் மேற்கொண்டனர். ஒரு பேருந்தில் 60 சதவீதம் பயணிகள் மட்டுமே ஏற அனுமதிக்கப்பட்டது. அதன்படி ஒரு பேருந்தில் 35 பயணிகள் மட்டுமே ஏறினர். இன்று மட்டும் 140 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன.