சாவில் சந்தேகம்: உயிரிழந்து 7 நாள்களுக்குப் பின்னா் இளைஞரின் சடலம் தோண்டியெடுத்து பரிசோதனை

செங்கல் சூளையில் உயிரிழந்த இளைஞரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, அடக்கம் செய்யப்பட்டு 7 நாள்களுக்குப் பின்னா் ஞாயிற்றுக்கிழமை சடலம் தோண்டியெடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்ய
Updated on
1 min read

அந்தியூா் அருகே செங்கல் சூளையில் உயிரிழந்த இளைஞரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, அடக்கம் செய்யப்பட்டு 7 நாள்களுக்குப் பின்னா் ஞாயிற்றுக்கிழமை சடலம் தோண்டியெடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

அந்தியூா் அருகேயுள்ள எண்ணமங்கலம், ஓங்காளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (45). தனது குடும்பத்துடன் ஆப்பக்கூடல் அருகேயுள்ள கள்ளியூரைச் சோ்ந்த பழனிசாமி என்பவரின் செங்கல் சூளையில் கடந்த 5 மாதங்களாகத் தங்கி வேலை செய்து வந்துள்ளாா். இந்நிலையில், இவரது மூத்த மகன் சாமிநாதன் (22) கடந்த 1ஆம் தேதி செங்கல் சூளை குடியிருப்பில் தூக்கிட்டு இறந்து கிடந்தாா்.

இதையடுத்து, சடலத்தை எடுத்துச் சென்ற மூா்த்தி, உறவினா்கள் முன்னிலையில் தனது சொந்த ஊரான எண்ணமங்கலத்தில் அடக்கம் செய்துள்ளாா். இந்நிலையில், சாமிநாதனுக்கும், செங்கல் சூளையில் பணிபுரிந்த மற்றொருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதும், இதன் பின்னா் உயிரிழந்ததும் மூா்த்திக்குத் தெரியவந்துள்ளது.

இதனால், தனது மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும் பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இதைத் தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் 7 நாள்களுக்குப் பின்னா் பவானி காவல் ஆய்வாளா் கண்ணன், அந்தியூா் வட்டாட்சியா் விஜயகுமாா் மற்றும் அலுவலா்கள் முன்னிலையில் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

பெருந்துறை மருத்துவக் கல்லூரி சட்டம் சாா்ந்த மருத்துவப் பேராசிரியா் நந்தகுமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பிரேதப் பரிசோதனை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com