ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இன்று காலை சுமார் 30 வயது இளைஞர் ஒருவர் திடீரென பாலத்தின் மேலே ஏறி காவிரி ஆற்றில் குதித்தார்.
அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் காவல்துறையினருக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றில் இறங்கி இளைஞரை தேடினர். பின்னர் சிறிது நேரத்தில் அவரது உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து கருங்கல்பாளையம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டவர் ஈரோடு, வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த வேல்முருகன் என தெரியவந்தது.
கார்மெண்ட்ஸ் தொழிலாளியான இவர் கடந்த சில நாள்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை கருங்கல்பாளையம் காவிரி பாலத்திற்கு சென்ற வேல்முருகன் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.