ஈரோடு: பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு ஜவுளி வியாபாரிகள் இரண்டு நாள் கடையடைப்பு போராட்டத்தை இன்று துவக்கினர்.
இதனால் 10 ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளன. சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஒரு நாளைக்கு ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் கலைச்செல்வன் கூறியதாவது:
கடந்த 18 மாதங்களாக நூல் மற்றும் பருத்தி விலை ஏற்றத்தை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். அதன் விளைவாக சில நாள்களுக்கு முன்பு பருத்தி மீதான இறக்குமதி வரி 11 சதவீதத்தை மத்திய அரசு செப்டம்பர் 30 வரை நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் பருத்தி இறக்குமதி செய்ய 45 அல்லது 60 நாள்கள் ஆகும்.
உள்ளூரில் நடந்த சில வாரங்களில் 40 நம்பர் நூல் விலை ரூபாய் 200 லிருந்து 400, 30 ரகம் ரூபாய் 170 லிருந்து 340, 20 ரகம் நூல் விலை 140 இருந்து 260 ஒரு கிலோவுக்கு உயர்ந்துள்ளது. 356 கிலோ பீல் பஞ்சு விலை ரூபாய் 43 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் செயற்கை நூலிழை மற்றும் ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனால் இதன் பாதிப்பு அங்கு தெரியவில்லை. ஆனால் தமிழகம் பருத்தி நூல் மற்றும் ஆடை உற்பத்தியில் முன்னணியில் திகழ்கிறது. எனவே இங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. இது சம்பந்தமாக மத்திய ஜவுளித் துறை அமைச்சரிடம் முறையீட்டு நாளை அவர் தில்லியில் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியுள்ளார்.
பொதுவாக இந்தியாவில் உற்பத்தியாகும் பருத்தியை காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா கொள்முதல் செய்து மில்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் பஞ்சு வர்த்தகர்களுக்கு வழங்குகிறார்கள். அவர்கள் ஆன்லைன் மூலம் பஞ்சின் விலை பல மடங்கு உயர்த்தி விடுகிறார்கள். மேலும் விலை உயர்வுக்காக பதுக்களும் நடைபெறுகிறது.
எனவே காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நேரடியாக பஞ்சை நூல் மில்களுக்கு வழங்க வேண்டும். பஞ்சு பதுக்கலை தடுக்க அத்தியாவசிய பொருள் சட்டத்தின்கீழ் பஞ்சை கொண்டு வரவேண்டும். இரண்டு தினங்களுக்கு முன்பு கோதுமையின் விலை அபரிதமாக உயர்ந்ததால் மத்திய அரசு அதன் ஏற்றுமதிக்கு தடை விதித்தது.
ஏனென்றால் உணவுப் பொருள்கள் அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோல் பருத்தியை கொண்டு வந்தால் பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்தலாம். பொதுவாக நாட்டில் உற்பத்தியாகும் பருத்தி நூல் உற்பத்தி எவ்வளவு, ஏற்றுமதி எவ்வளவு என்று புள்ளிவிபரங்கள் துல்லியமாக இல்லை.
இதையும் படிக்க: நூல் விலை உயர்வு: கோவையில் 2 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தம்
எனவேதான் தற்போது பிரச்னை தோன்றியுள்ளது. நாட்டில் தற்போது 40 லட்சம் பேல் நூல் பற்றாக்குறை உள்ளது என்கிறார்கள். இதை மத்திய அரசு சரி செய்ய வேண்டும். இரண்டு நாள் கடையடைப்பு போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள 25 சங்கங்கள் பங்கேற்றுள்ளன.
ஈரோட்டில் ஜவுளி டையிங், பிராசஸிங், போல்டிங், பேக்கிங் தொழிலாளர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். எனவே மத்திய அரசு உடனடியாக இவ்விஷயத்தில் தலையிடவேண்டும். சங்க செயலாளர் சிதம்பர சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.