கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து முதல் போக பாசனத்துக்கு தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் தண்ணீா் சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்கள் மூலம் கோபி, அந்தியூா், பவானி உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 24,504 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் முதல்போக பாசனத்துக்கு தண்ணீா் திறப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து இந்த அணையிலிருந்து முதல்போக பாசனத்துக்குத் தண்ணீா் சனிக்கிழமை திறக்கப்பட்டது. தடப்பள்ளி வாய்க்காலில் விநாடிக்கு 300 கன அடி தண்ணீரும், அரக்கன்கோட்டை வாய்க்காலில் விநாடிக்கு 200 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது. பொதுப் பணித் துறை அதிகாரிகள், விவசாயிகள் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவைத்தனா். இதையடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தண்ணீரில் மலா் தூவி வணங்கினா்.
பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறிகையில், முதல் போக பாசனத்துக்கு ஏப்ரல் 21 முதல் ஆகஸ்ட் 18 ம் தேதி வரை 120 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்படும் என்றனா்.