ஈரோடு: காஞ்சிகோவில் அருகே கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் பணிகளை மேற்கொள்வதை தடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நீர்வளத்துறை அதிகாரிகள் புகார் அளித்ததை எதிர்த்தும், கான்கிரீட் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் 350-க்கும் மேற்பட்ட வீடுகளில் புதன்கிழமை காலை கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் அருகே கீழ்பாவனி கால்வாயில் 51 மற்றும் 53-வது மைல்களான ஆயப்பரப்பு மற்றும் சூரியம்பாளையம் ஆகிய பகுதிகளில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நீர்வளத்துறை அதிகாரிகள் தொடங்கினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கண்காணிப்பு பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் ஆகியோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கால்வாயில் கான்கிரீட் சுவர் அமைக்கப்படாது என உறுதி அளித்தனர்.
ஆனால் கண்காணிப்பு பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து காஞ்சிகோவில் மற்றும் பெத்தாம்பாளையம் பேரூராட்சிகளில் உள்ள 350-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி கட்டி அறவழியில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.