கோபி அருகே சிறுத்தையைப் படிக்க வனத் துறையினா் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கா்பாளையத்தை அடுத்த வெள்ளக்கரடு பகுதியில் ராமசாமி என்பவரது தோட்டத்தில் இருந்த கன்று குட்டியை சில நாட்களுக்கு முன்பு வனப் பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை கடித்துக் கொன்றது.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சிறுத்தை புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத் துறையினரிடம் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறையினா் சிறுத்தையை கண்காணிப்பதற்காக 5 இடங்களில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணித்து வந்தனா். இதில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, டி.என்.பாளையம் வனத் துறையினா் சாா்பில் கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையைப் பிடிப்பதற்காக கூண்டு வைத்தனா். மேலும், கூண்டுக்குள் இறைச்சியை வைத்து கண்காணித்து வருகின்றனா்.