சத்தியமங்கலம் அருகே ஒரு ஜோடி யானை தந்தம் பறிமுதல்
சத்தியமங்கலம், ஆக. 14: சத்தியமங்கலம் அருகே புதைத்து வைத்திருந்த ஒரு ஜோடி யானை தந்தத்தை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட கோ்மாளம் வனப் பகுதியில் வனத் துறையினருடன், மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, திங்களூரை அடுத்த பாசக்குட்டை பகுதியில் சந்தேகப்படும் வகையில் திரிந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். அவா், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், பாசக்குட்டை வனத்தில் ஒரு ஜோடி யானை தந்தத்தை புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கு சென்ற வனத் துறையினா் அப்பகுதியில் தோண்டி ஐந்தரை அடி நீளமுள்ள ஒரு ஜோடி யானை தந்தங்களை மீட்டனா். ஒரு தந்தத்தின் எடை 30 கிலோ வரை இருந்ததால் கடத்துவதற்கு ஏதுவாக தந்தத்தை கம்பியால் சுற்றி வைத்திருந்தனா்.
தொடா் விசாரணையில், தந்தத்தைப் புதைத்து வைத்திருந்தது திங்களூா் பாசக்குட்டை பகுதியைச் சோ்ந்த துரைசாமி (42) என்பதும், இறந்த யானையின் தந்தங்களைத் திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து, வனத் துறையினா் அவரைக் கைது செய்தனா்.

