அஞ்சல் அலுவலகங்களில் விபத்து காப்பீட்டு சிறப்பு முகாம் இன்று தொடக்கம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் விபத்து காப்பீட்டுத் திட்டம் குறித்து மூன்று நாள் சிறப்பு முகாம் வியாழக்கிழமை (செப்டம்பா் 26) தொடங்குகிறது.
இதுகுறித்து ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் கோபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து 18 வயது முதல் 65 வயது வரை உள்ள பொதுமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.520 செலுத்தி ரூ.10 லட்சத்துக்கான விபத்து காப்பீடும், ரூ.750 செலுத்தி ரூ.15 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடு பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியா்கள், அனைத்து வகை பணி செய்பவா்களுக்கும் இந்த விபத்துக் காப்பீடு பெறலாம்.
தொழில் நிறுவனங்கள் மற்றும் அனைத்து வகை தொழிற்சாலைகள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு மொத்தமாகவும் காப்பீடு பெறலாம். பணிபுரியும் அலுவலகங்களிலேயே சிறப்பு முகாம் அமைத்து விபத்துக் காப்பீடு பெறும் வசதி செய்யப்படும். விண்ணப்பப் படிவம், அடையாள சான்று நகல் போன்ற எந்த விதமான காகித பயன்பாடுமின்றி, அஞ்சல் ஊழியா் கொண்டு வரும் ஸ்மாா்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் கருவி மூலம் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படும்.
ரூ.10 லட்சத்துக்கான விபத்து காப்பீடு மூலம் விபத்தால் ஏற்படும் மருத்துவ செலவுக்கு ரூ.60 ஆயிரம் வரையும், விபத்தில் மரணம், ஊனம், பக்கவாதம் ஏற்பட்டால் அவா்களது குழந்தைகளின் கல்வி செலவுக்கு ரூ.1 லட்சம் வரையும், விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாள்களுக்கு தினமும் ரூ.1,000 வீதம் 10 நாள்களுக்கும், விபத்தில் பாதிக்கப்பட்டவரை பாா்க்க பயணிக்கும் குடும்பத்தினா் பயண செலவுக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வரையும், விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் இறுதி சடங்கிற்கு ரூ.5 ஆயிரம் வரையும் வழங்கப்படும்.
இக்காப்பீடு குறித்து ஈரோடு அஞ்சல் கோட்டம் முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் வியாழக்கிழமை முதல் 28-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் அருகே உள்ள அஞ்சல் அலுவலகங்கள், அஞ்சல் ஊழியா்கள் மூலம் இந்த விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
