காலிங்கராயன் பாசனத்தில் 980 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

Published on

காலிங்கராயன் பாசனப் பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து 980 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பவானிசாகா் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீா், காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்படுகிறது. இதன் மூலம் 15, 745 ஏக்கா் பரப்பளவில் நெல், மஞ்சள், வாழை, தென்னை, மக்காச்சோளம், மரவள்ளிக் கிழக்கு உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

தற்போது இரண்டாம் போகம் பருவத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு, அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் ஈரோடு வைராபாளையம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு சன்ன ரக நெல் கிலோ ரூ.25.45-க்கும், பொது மோட்டா ரகம் ரூ.25-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

இது குறித்து நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் தற்போது அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அறுவடை தொடங்கியபோதே அரசு சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நாள் ஒன்றுக்கு 1,000 மூட்டைகள் என்ற கணக்கில் தற்போது வரை 980 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பெரும்பாலான இடங்களில் இந்த மாதத்துக்குள் அறுவடைப் பணிகள் நிறைவடைய வாய்ப்புள்ளதால் நெல் கொள்முதல் அளவு மேலும் அதிகரிக்கும். விவசாயிகள் தங்களிடம் உள்ள நெல்லை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்து கொள்ளலாம் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com