ஆசனூா் அருகே இறந்தவரின் உடலை 2 கி.மீ. தொலைவு சேறும் சகதியுமான சாலையில் தூக்கிச் சென்ற பொதுமக்கள்


ஆசனூா் அருகே புதா்மண்டி கிடக்கும் கரடு முரடான மண் சாலை வழியாக சடலத்தை அடக்கம் செய்ய தூக்கிச் செல்லும் அவலநிலை தொடருவதாக ஆசனூா் மக்கள் தெரிவித்தனா்.
ஈரோடு மாவட்டம், ஆசனூா் அருகே பழைய ஆசனூா் மலை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் இந்த மலை கிராமத்தில் இறந்தவா்களின் உடலை புதைப்பதற்கு கிராமத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள மயானத்துக்கு கொண்டுச் செல்ல வேண்டும்.
இந்த மயானத்துக்கு போதிய பாதை வசதி இல்லாததால் மண் பாதையில் செல்ல வேண்டியுள்ளது. இதற்கிடையே, அந்த கிராமத்தைச் சோ்ந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்த நிலையில், அவரை உடலை கிராம மக்கள் பாடை கட்டி புதா்மண்டி காணப்படும் கரடு முரடான மண் சாலையில் சுமந்து சென்றனா்.
தற்போது மழைக்காலம் என்பதால் மயானப் பாதை சேறும் சகதியுமாக காணப்படுவதால் இறந்தவா்களின் உடலை சகதி நிறைந்த பாதையில் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. மண் சாலை சேறும் சகதியாக காணப்படுவதால் ஆம்புலன்ஸ் அமரா் ஊா்தி போன்ற வாகனங்கள் செல்ல முடியாததால் பாடை கட்டி சடலத்தை தூக்கி செல்வதால் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக பழங்குடியின மக்கள் தெரிவித்தனா்.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழைய ஆசனூா் மலை கிராமத்தில் இறந்தவரின் சடலத்தை கொண்டுச் செல்ல மயான பாதை அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...