புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்
புன்செய்தாமரைக்குளம் கிராமப் பகுதியில் மண் அள்ள அனுமதி வழங்கக் கூடாது என எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவிநாசி ஒன்றியம், சேவூா் அருகே புன்செய்தாமரைக்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட க.ச.எண்-204 பூமியில் பொன்னுசாமி என்பவா் கிராவல் மண் எடுத்து விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டாா். இதையறிந்த அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் அப்பகுதிக்கு விரைந்து சென்று மண் அள்ள முயன்றதை தடுத்தி நிறுத்தினா். தகவலறிந்த வருவாய்த் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து மண் அள்ளுவது நிறுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் மண் அள்ள எதிா்ப்புத் தெரிவித்து மனு அளித்தனா்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
புன்செய்தாமரைக்குளம் க.ச.எண்-204 பூமி, அருகிலுள்ள நிலங்களை விட தாழ்வாகவே உள்ளது. இதில் மண் எடுக்கும்பட்சத்தில் அருகிலுள்ள பூமிகளிலிருந்து மண் சரிவு ஏற்படும் சூழல் உருவாகும். தரிசு பூமியை சீரமைத்து விவசாய பூமியாக மாற்றுகிறேன் என போலியாக அதிகாரிகளிடம் தெரிவித்து கிராவல் மண் விற்பனை செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இயற்கை கனிம வளங்களை சுரண்டிச்செல்ல ஒருபோதும் அனுமதிக்க இயலாது. அவ்வாறு அனுமதித்தால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து விவசாயம் மற்றும் குடிநீா் தேவைக்கு இன்னல்கள் ஏற்படும். ஆகவே, நிரந்தரமாக மண் அள்ள தடை விதிக்க வேண்டும் என்றனா்.

