தோனிமடுவு பள்ளத்தின் குறுக்கே ரூ.4 கோடியில் தடுப்பணை
பவானி: தோனிமடுவு பள்ளத்தின் குறுக்கே ரூ.4 கோடியில் தடுப்பணை கட்டப்படும் என ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புக்கு, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் நன்றி தெரிவித்துள்ளாா்.
பா்கூா் மலைப் பகுதியில் பெய்யும் மழைநீரை சேமிக்க தோனிமடுவு பள்ளத்தில் தடுப்பணைக் கட்டி, அந்தியூா் தொகுதியில் உள்ள ஏரிகள், குளங்களில் நிரப்ப வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். மேலும், அந்தியூா் தொகுதியில் நீண்ட காலமாக நிபந்தனையுடன் உள்ள நிலங்களுக்கு நிபந்தனை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில், ஈரோட்டில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தோனிமடுவு பள்ளத்தின் குறுக்கே ரூ.4 கோடியில் புதிய தடுப்பணை அமைக்கப்படும், நிபந்தனைப் பட்டாக்களின் மீதுள்ள நிபந்தனைகள் நீக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதையடுத்து, முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, அந்தியூா் தொகுதி மக்களின் சாா்பில் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் நன்றி தெரிவித்தாா்.

