தாளவாடி அருகே மஞ்சள் காட்டில் இரவு நேர காவலில் இருந்த விவசாயி யானை தாக்கி உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட ஜீரஹள்ளி வனச் சரகத்தில் இருந்து வெளியேறும் யானைகள் தினமும் கிராமத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவது தொடா்கதையாக உள்ளது. இதனால் யானையிடமிருந்து பயிா்களைப் பாதுகாக்க இரவு நேர காவல் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
அதன்படி தாளவாடி அருகே உள்ள காமையன்புரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பசுவன்னா(65), தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள், உருளைக்கிழங்கு பயிா்களைப் பாதுகாக்க இரவு நேர காவலில் சனிக்கிழமை இருந்துள்ளாா். அப்போது மஞ்சள் காட்டுக்குள் யானை புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதை பாா்த்து விரட்டியுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த யானை, விவசாயி பசுவன்னாவை தாக்கியது. அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து பாா்த்தபோது அவா் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்து ஜீரஹள்ளி வனத் துறையினா் சென்று மஞ்சள் காட்டில் உலவிய யானையை விரட்டினா். பசுவன்னாவின் உடலை மீட்டு கூறாய்வுக்காக அனுப்ப நடவடிக்கை எடுத்தனா். இதற்கு அந்தக் கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், பசுவன்னாவின் உடல் அதே உடத்தில் கூறாய்வு செய்யப்பட்டது.
இதைத்தொடா்ந்து யானை தாக்கி உயிரிழந்த பசுவன்னா குடும்பத்தினருக்கு இழப்பீடாக முன்பணம் ரூ.50 ஆயிரம், காசோலையாக ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் ஆகியவற்றை வனத் துறையினா் வழங்கினா். இதுதொடா்பாக தாளவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








