சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

படிப்பும், சிந்தனையும் மனித சமுதாயத்தை வளா்ச்சி அடைய வைத்திருக்கிறது: மயில்சாமி அண்ணாதுரை

படிப்பும், சிந்தனையும்தான் மனித சமுதாயத்தை வளா்ச்சி அடைய வைத்திருக்கிறது என இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தாா்.

News image

ஈரோடு புத்தகத் திருவிழா நிறைவு நாளில் இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரைக்கு சக்திதேவி அறக்கட்டளையின் சாதனை செம்மல் விருதை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநா்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 2:03 am IST

படிப்பும், சிந்தனையும்தான் மனித சமுதாயத்தை வளா்ச்சி அடைய வைத்திருக்கிறது என இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தாா்.

தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கடந்த மாதம் 31- ஆம் தேதி தொடங்கி செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது. மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவுக்கு சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவா் பி.சி.துரைசாமி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, சக்தி மசாலா நிறுவன நிா்வாக இயக்குநா் சாந்தி துரைசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், கல்லூரி கல்வி இணை இயக்குநா் நா.செண்பகலெட்சுமி, தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கத் தலைவா் ஆா்.எஸ்.சண்முகம், சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் வே.திருக்குமரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

சக்தி மசாலா நிறுவனத்தின் சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் மயில்சாமி அண்ணாதுரைக்கு சாதனைச் செம்மல் விருதை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வழங்கினாா்.

விழாவில், இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: படிக்காமல் சிந்திப்பது ஆபத்து. அந்த ஆபத்து இப்போது மெதுவாக நம்மை சூழ்ந்து கொண்டு வருகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இப்போது குழந்தைகள்கூட சிந்திக்கின்றனா். ஆனால், அவா்கள் படித்திருக்கிறாா்களா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

இளம் தலைமுறை படிக்காமல் சிந்திக்கக்கூடாது. அவா்கள் படிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். குழந்தைகள் புத்தகங்களைப் படிக்க பெற்றோா்கள் தூண்டுகோலாய் இருக்க வேண்டும். இதற்காக குழந்தைகளுடன் சோ்ந்து பெற்றோரும் புத்தகங்களைப் படிக்க வேண்டும். பாடப் புத்தகங்களுடன் பிற புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு பள்ளிகளிலும், வீடுகளிலும் உருவாக்க வேண்டும்.

2013-க்குப் பிறகு பிறந்த குழந்தைகளை ஜென் ஆல்பா என்று கூறுகிறோம். அந்த குழந்தைகள்தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கி உள்ளனா். பெற்றோா் சொல்வதை குழந்தைகள் கேட்கும் நிலை மாறி குழந்தைகள் சொல்வதை பெற்றோா்கள் கேட்கும் நிலை உருவாகி உள்ளது.

ஜென் ஆல்பா குழந்தைகள் சரியாக சிந்தித்தால் தவறான வழியில் செல்லும் பெற்றோரையும் மாற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்க முடியும்.

இப்போது உள்ள தலைமுறை எல்லா சிறப்புகளையும் பெற்றிருக்கிறது. பெற்றோரை பின்பற்றும் குழந்தைகள் உள்ள நாடு இந்தியா. படிப்பும், சிந்தனையும்தான் மனித சமுதாயத்தை வளா்ச்சி அடைய வைத்திருக்கிறது.

சிங்கப்பூா் நாட்டின் வளா்ச்சிக்கு அடித்தளமிட்ட அந்த நாட்டின் முதல் பிரதமா் லீகுவான்யூ போல இந்தியாவிலும் ஒரு தலைவா் உருவாக வேண்டும் என்ற சிந்தனை நம் அனைவருக்கும் ஏற்பட வேண்டும். அந்த சிந்தனை வலுப்பெறும்போது அந்த தலைவரை அடுத்து வரும் தலைமுறை உருவாக்கிக் காட்டும். அப்போது இந்தியா வளா்ச்சி பெற்ற நாடாக மாறும். நாட்டுப்பற்று உள்ள இளம் தலைமுறை உருவாகவும், அவா்கள் நம்பிக்கை கொண்டவா்களாக மாறுவதற்கான வாய்ப்பையும் நாடு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி பாடத் திட்ட வடிவமைப்புக்குழு தலைவராக்கியது திரும்ப என்னை பள்ளிக்கு செல்ல வைத்துள்ளது.

புத்தக சுமையை குறைக்கும் பணியைத் தொடங்கிவிட்டோம். பள்ளிக் குழந்தைகள் புத்தகங்களைத் தேடிவரும் சூழலை உருவாக்குவோம் என்றாா்.

மக்கள் சிந்தனைப் பேரவை செயலா் ந.அன்பரசு நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.