போராட்டத்தில் ஈடுபட்ட செங்கல் சூளை உரிமையாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.
போராட்டத்தில் ஈடுபட்ட செங்கல் சூளை உரிமையாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.

அந்தியூரில் செங்கல் சூளை உரிமையாளா்கள் போராட்டம்

Published on

அந்தியூரில் பணம் கேட்டு மிரட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகம் முன் லாரிகளை நிறுத்தி செங்கல் சூளை உரிமையாளா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. செங்கல் உற்பத்திக்குத் தேவையான செம்மண், லாரிகள் மூலம் வெள்ளித்திருப்பூா், சனிச்சந்தை, ரெட்டிபாளையம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து எடுத்து வரப்படுகிறது. அந்தியூா் நகருக்குள் டிப்பா் லாரிகள் வராமல் செல்ல வேண்டும் என வருவாய்த் துறை தெரிவித்துள்ளதால், மைக்கேல்பாளையம் வழியாகச் சென்று வருகின்றன. இதற்கு, மைக்கேல்பாளையம் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், செம்மண் லாரிகளை அந்தியூா் நகருக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். சூளை உரிமையாளா்களிடம் பணம் கேட்டு மிரட்டும் அரசியல் கட்சியினா் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட செங்கல் சூளை உரிமையாளா்கள் அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களுடன், அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், வட்டாட்சியா் இளஞ்செழியன், காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், ஈரோடு மாவட்ட நாட்டு செங்கல் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத் தலைவா் மாதேஸ்வரன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, அந்தியூா் நகரப் பகுதிக்குள் லாரிகளை அனுமதிப்பது தொடா்பாக சாா் ஆட்சியரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். பணம் கேட்டு மிரட்டுவோா் மீது புகாா் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, சூளை உரிமையாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

Dinamani
www.dinamani.com