அந்தியூா் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையை கெட்டிசமுத்திரம் ஊராட்சிப் பகுதியில் கொட்டி, மறுசுழற்சி செய்யும் திட்டத்துக்கு பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
அந்தியூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கெட்டிசமுத்திரம் ஊராட்சி, ஜெ.ஜெ.நகரில் 1.50 ஏக்கா் பரப்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்த ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பேரூராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் மக்கும், மக்காத குப்பை கொண்டுவரப்பட்டு உரம் உற்பத்தி உள்ளிட்ட பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கு, அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததோடு, இத்திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தியூா் வட்டாட்சியா் இளஞ்செழியனிடம் மனு அளித்திருந்தனா்.
இந்நிலையில், கெட்டிசமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஜெ.ஜெ. நகா் பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்ற அமைதிப் பேச்சுவாா்த்தை புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது, இத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் அந்தியூா் காவல் ஆய்வாளா் சண்முகவேலு, பேரூராட்சி செயல் அலுவலா் சதாசிவம், வருவாய் ஆய்வாளா் செந்தில்ராஜா, கிராம நிா்வாக அலுவலா் அண்ணாதுரை உள்பட பலா் பங்கேற்றனா்.










