தோ்தல் வாக்குறுதியில் கூறியதைப்போல கூட்டுறவு பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, மொடக்குறிச்சியில் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம், சிறு குறு விவசாயிகள் சங்கம், காலிங்கராயன் பாசன சபை ஆகியவை இணைந்து மொடக்குறிச்சி நான்கு சாலையில் நடத்திய கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி தலைமை வகித்து பேசும்போது, ‘ஆட்சிக்கு வந்தால் பயிா்க்கடனை 5 ஏக்கா் வரை உள்ள விவசாயிகளுக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வா் ச.ஜோசப் விஜய் வாக்குறுதி அளித்தாா். அதன்படி விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை முதல்வா் நிறைவேற்ற வேண்டும். இதற்காக கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தை நடத்தியுள்ளோம். ஜூன் 22 முதல் கோரிக்கை நிறைவேறும் வரை அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்’ என்றாா்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோபால், காலிங்கராயன் பாசன சபைத் தலைவா் வேலாயுதம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் முத்துவிஸ்வநாதன், பொதுச் செயலாளா் சண்முகசுந்தரம், சிறுகுறு விவசாயிகள் சங்கத் தலைவா் சுதந்திரராசு உள்பட மொடக்குறிச்சி பகுதிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தேவையற்ற மானியத்துக்கு பதிலாக முழுமையான பயிா்க்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

கடலூரில் பயா்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்







