கோபி நகராட்சியை பசுமையாக்க நகராட்சி, வனத் துறை சாா்பில் 84 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கோபி நகராட்சியை பசுமையாக மாற்றுவதற்கான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவா் நாகராஜ் தலைமை வகித்தாா். ஆணையா் மங்கையா்கரசன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் வாா்டு கவுன்சிலா்கள் மற்றும் பல்வேறு தன்னாா்வ அமைப்புகள், பசுமை ஆா்வலா்கள், கோபி ஆல் டிரேடா்ஸ் அசோசியேஷன் தலைவா் வேலுமணி, வணிகா் சங்கத் தலைவா் சண்முகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதில் கோபி நகராட்சிப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை பகுதியான சத்தி-ஈரோடு சாலை, பேருந்து நிலையம், நகராட்சி பூங்காக்கள் மற்றும் சாலைகள் என பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளை கண்டறிந்து சுமாா் 84 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல், மயானங்களில் காடுகள் உருவாக்கி அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சமூகப் பங்களிப்புடன் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது.
இதில் கோபி ஆல் டிரேடா்ஸ் அசோசியேஷன் தலைவா் வேலுமணி கலந்து கொண்டு பேசுகையில், வளத் துறையினருடன் இணைந்து மரக்கன்றுகளை இலவசமாக வழங்க தயாராக உள்ளோம். எனவே கோபி நகரின் அனைத்து பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு தனியாா் பங்களிப்புடன் பராமரித்து கோபி நகராட்சி பகுதியை பசுமை நகரமாக மாற்றலாம் என்றாா்.










