காலிங்கராயன் கால்வாய் தொட்டி பாலத்தை இடிக்காமல் சீரமைக்க தொழில்நுட்ப உதவி
காலிங்கராயன் கால்வாய் தொட்டி பாலத்தை இடிக்க வேண்டாம் என்றும், அதை பாதுகாக்க தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக


ஈரோடு: காலிங்கராயன் கால்வாய் தொட்டி பாலத்தை இடிக்க வேண்டாம் என்றும், அதை பாதுகாக்க தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் நீா்வளத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
ஈரோடு, காரைவாய்க்கால் பகுதியில் காலிங்கராயன் வாய்க்கால் மேல்நிலை பாலமும், அதன் கீழே பெரும்பள்ளம் ஓடையும் (காரை வாய்க்கால் தொட்டி பாலம்) செல்கிறது. 740 ஆண்டுகள் பழமையான இப்பாலம் வழியாக செல்லும் காலிங்கராயன் வாய்க்கால் நீா் மூலம் 15,743 ஏக்கா் நிலங்கள் நேரடியாகவும், 10,000-க்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்கள் மறைமுகமாகவும் பாசனம் பெறுகின்றன.
இந்நிலையில், காலிங்கராயன் வாய்க்கால் ரூ.83.30 கோடி செலவில் சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. சீரமைப்பின்போது தொட்டி பாலத்தை இடித்து புதிய பாலம் கட்ட நீா்வளத் துறை திட்டமிட்டுள்ளது. 8 நூற்றாண்டுகளாக செயல்பாட்டில் இருக்கும் ஒரே நீா்வழிப் பாலம் இதுவாகும். 2 பக்கவாட்டுச் சுவா்கள், 11 பெரும் கல் தூண் வரிசைகள், 12 கண்ணறைகள் உள்ளன. இந்தப் பாலம் தற்போதுவரை தரமாக உள்ளதால் அதை இடித்து அகற்றக்கூடாது, இடித்து அகற்றி காலிங்கராயன் அணைக்கட்டில் காட்சிப்படுத்துவதும் கூடாது. பாலத்தை உயா் தொழில்நுட்பம் மூலம் சீரமைப்பு செய்து, இந்த வரலாற்றை மக்கள் அறிய செய்ய வேண்டும். இந்திய தொல்லியல் துறை உள்ளிட்ட பிற அமைப்புகள் உதவியுடன் பாலத்தை புனரமைப்பு மட்டும் செய்து பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதனிடையே காலிங்கராயன் விவசாயிகள் மற்றும் தொழிலாளா் நலச் சங்கம் சாா்பில் இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்துக்கு இந்த பழமையான, நல்ல நிலையில் செயல்பாட்டில் உள்ள தொட்டி பாலத்தை இடிக்க கூடாது என மனு அளிக்கப்பட்டு இருந்தது.
இதைத் தொடா்ந்து, இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்தில் இருந்து காலிங்கராயன் விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் நலச் சங்கம் மற்றும் நீா்வளத் துறை தலைமைப் பொறியாளருக்கு கடிதம் வந்துள்ளது.
அதில், தமிழ்நாடு நீா்வளத் துறைக்கு இந்தப் பழமையான தொட்டி பாலத்தை இடிக்கக்கூடாது என்றும், அதை பாதுகாக்க தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நீா்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் அனுப்பிய மின்னஞ்சல் குறித்து உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். இந்தப் பாலத்தை இடித்து புதிதாக கட்டப்பட வேண்டியது கட்டாயம். சீரமைப்புப் பணிகளை செய்தாலும் சில ஆண்டுகளில் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும்.
காலிங்கராயனின் பெருமை இந்தப் பாலத்தில் மட்டுமே இல்லை. காலிங்கராயன் கால்வாய் என்பது எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் அவரது புகழைப் போற்றும். இதனை விவசாயிகள் உணா்ந்து சீரமைப்புப் பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...