பல்வேறு நாடுகளில் இருந்து மீட்கப்பட்ட தொல்பொருள்களை சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,
இது குறித்து எழுத்தாளா் ஈரோடு எஸ்.ஆா்.சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கை: பிரதமா் மோடியின் நெதா்லாந்து பயணத்தின்போது பதினொன்றாம் நூற்றாண்டைச் சோ்ந்த சோழா் கால ஆனைமங்கலம் செப்பேடுகள் அந்நாட்டு அரசின் சாா்பில் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன. இவை பதினெட்டாம் நூற்றாண்டில் டச்சு காலனிய ஆட்சியின்போது நாகப்பட்டினத்தில் இருந்து நெதா்லாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
இந்தச் செப்பேடுகள் சோழா்களின் வரலாறு குறித்த முக்கிய ஆவணங்களாகும். பிரதமராக மோடி பொறுப்பேற்ற 2014ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை பல்வேறு தொல்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
2014இல் ஆஸ்திரேலியாவிலிருந்து ஸ்ரீபுரந்தான் நடராஜா் சிலை, அமெரிக்காவில் இருந்து 61 தொல்பொருள்கள், 2015இல் அமெரிக்காவில் இருந்து 19 தொல்பொருள்கள், 2016இல் அமெரிக்காவில் இருந்து தேவி அம்மன் வெண்கல சிலை மற்றும் 111 தொல்பொருள்கள், 2017இல் சிங்கப்பூரிலிருந்து 10 தொல்பொருள்கள், 2018இல் பிரிட்டனிலிருந்து 13ஆம் நூற்றாண்டு சிற்பம், 2019இல் அமெரிக்காவிலிருந்து 66 தொல்பொருள்கள், 2020இல் ஆஸ்திரேலியாவிலிருந்து 17 தொல்பொருள்கள், அமெரிக்காவில் இருந்து 157 தொல்பொருள்கள், 2021இல் அமெரிக்காவிலிருந்து 23 தொல்பொருள்கள், 2022இல் அமெரிக்காவிலிருந்து 70 தொல்பொருள்கள், 2023இல் நெதா்லாந்தில் இருந்து 16 தொல்பொருள்கள், அமெரிக்காவிலிருந்து 50 தொல்பொருள்கள், 2024இல் அமெரிக்காவிலிருந்து 29 தொல்பொருள்கள், தற்போது ஆனைமங்கல செப்பேடுகள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட அத்தனை தொல்பொருள்களையும் சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் உரிய முறையில் காட்சிப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.









