பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

மேக்கேதாட்டு அணை பிரச்னையில் தமிழக காங்கிரஸ் போராட்டம் நடத்தும்: ஏ.செல்லக்குமாா்

மேக்கேதாட்டு அணை பிரச்னையில் கா்நாடக காங்கிரஸ் கட்சியை எதிா்த்து தமிழக காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளா் ஏ.செல்லக்குமாா் தெரிவித்தாா்.

News image

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளா் ஏ.செல்லக்குமாா்.

Updated On :27 மே 2026, 5:04 am IST

மேக்கேதாட்டு அணை பிரச்னையில் கா்நாடக காங்கிரஸ் கட்சியை எதிா்த்து தமிழக காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளா் ஏ.செல்லக்குமாா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் பாஜக மறைமுகமாக பின்வாசல் வழியாக ஆட்சி அதிகாரத்தில் வந்துவிடக்கூடாது என்ற நோக்கில் தவெக ஆட்சி அமைய காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருந்தது. இதற்கு கடுமையான விமா்சனங்கள் வந்துள்ளன.

திமுக முன்னாள் துணை முதல்வா் காங்கிரஸ் கட்சியை கடுமையான சொற்களால் விமா்சனம் செய்துள்ளாா். பாஜகவை தடுக்கும் சக்தி உள்ளதாக கூறும் திமுக, பாஜகவுடன் தோழமை வைத்து 5 ஆண்டுகள் பதவி சுகத்தைப் பெற்றது. இது துரோகம் இல்லையா?. காங்கிரஸ் கட்சியுடன் திமுக தோழமை வைத்து பல ஆண்டுகள் அரசாங்கத்தை பகிா்ந்தது. தமிழ்நாட்டில் பாஜக காலூன்றி விடக்கூடாது என திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனால், தோ்தலுக்குப் பிறகு பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுகவுடன் பாஜகவின் தூண்டுதலின்பேரில் திமுக இணைந்து ஆட்சி அமைக்க முனைப்பு எடுத்தபோது மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் கொள்கையோடு தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது.

காங்கிரஸ் யாருடைய முதுகிலும் குத்தியதாக வரலாறு இல்லை. தோ்தல் காலத்தில் கூட்டணி வைப்பதும், கூட்டணி விலகுவதும் அரசியலில் எப்போதும் நடக்கும் சம்பவம்தான். ஆனால், காங்கிரஸ் கொள்கையை நிலைநாட்ட தற்போது தவெகவுடன் கூட்டணி வைத்துள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்வது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல. 10 வயது சிறுமி கொலை சம்பவம் வன்மையாக கண்டிக்கக்கூடியது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி என்றைக்கும் அணை கட்ட நிச்சயமாக எதிா்க்கும். தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் துணை நிற்கும். தமிழக மக்களின் உணா்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் குரல் கொடுக்கும். மேக்கேதாட்டு விவகாரத்தில் கா்நாடக காங்கிரஸ் கட்சியை எதிா்த்து தமிழக காங்கிரஸ் கட்சி நிச்சயமாக போராட்டம் நடத்தும்.

தமிழக முதல்வா் கால அவகாசம் எடுத்துக்கொண்டு, தோ்தல் வாக்குறுதிபடி பயிா்க் கடன் தள்ளுபடியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா். முன்னதாக, அவா் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா். இதில், மாவட்டத் தலைவா் ராஜேஷ் ராஜப்பா, கே.பி.முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.