ஈரோட்டில் ரயில்வே கூட்ஸ்ஷெட் எடை நிலையத்தில் ஓடும் லாரியில் இருந்து மயங்கி கீழே விழுந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் ஞானபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சசிக்குமாா் (55). இவா், ஈரோடு ரயில்வே கூட்ஸ்ஷெட்டில் லாரி ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா்.
சசிக்குமாா் வியாழக்கிழமை மாலை கூட்ஸ்ஷெட்டில் பாரம் ஏற்றிக்கொண்டு, அங்குள்ள எடைநிலையத்தில் எடை போட்டுள்ளாா். பின்னா் லாரியை அங்கிருந்து ஓரமாக நிறுத்துவதற்காக ஓட்டிச் சென்றாா்.
அப்போது சசிக்குமாா் திடீரென மயங்கி லாரியில் இருந்து கீழே விழுந்தாா். லாரி கட்டுப்பாட்டு இழந்து சில அடி தூரம் சென்று சுவரில் மோதி நின்றது. இதில் காயம் அடைந்த சசிக்குமாரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு சசிக்குமாா் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து ஈரோடு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.








