மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் 4 மாதங்களுக்குப் பின் திங்கள்கிழமை முதல் இயக்கப்பட்டது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் தினசரி காலை 7.10 மணிக்கு அடர்ந்த வனப்பகுதிகள் இடையே செல்லும். இதில் பயணம் செய்ய உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த மலை ரயில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 4 மாதங்களாக இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் தற்போது திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு இயக்கப்பட்டு வந்த மலை ரயில் 4 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இயக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து இந்த மலை ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து திங்கள்கிழமை காலை 7.10 மணிக்கு உதகைக்கு 4 பெட்டிகளோடு சுற்றுலாப் பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.
இதில் 136 பயணிகள் சென்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.