உதகை: இந்தியாவின் தலைசிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் வருடந்தோறும் கோடை விழாக்களான காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி போன்ற கண்காட்சிகள் தோட்டக்கலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு பூங்காக்களில் நடத்தப்பட்டு வருகிறது.
2022-ம் ஆண்டிற்கான கோடை விழாக்களின் தொடக்கமாக கோத்தகிரி நேரு பூங்காவில் 11-வது காய்கறி கண்காட்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் சுற்றுலாத்துறை இயக்குநர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு மே 8 அன்று நிறைவுற்றது.
இதன் தொடர்ச்சியாக இன்று 17-வது உதகை ரோஜா கண்காட்சி வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
17-வது உதகை ரோஜா கண்காட்சியின் சிறப்பம்சமாக சுமார் 31,000 வண்ண ரோஜாக்களை கொண்டு 15 அடி உயரத்தில் மரவீடு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளை கவரும் விதமாக கார்டூன் கதாபாத்திர வடிவமான மோட்டு பட்லு, மான், ப்யானோ மற்றும் பனி மனிதன் போன்ற வடிவங்களும், தமிழ்நாடு அரசின் புதிய திட்டமான மீண்டும் மஞ்சப்பை திட்டத்தினை அனைவரும் கடைபிடிக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த, மஞ்சப்பை போன்ற வடிவங்களும் சுமார் 50,000 ரோஜாக்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில் இதர மாவட்டங்களான திருநெல்வேலி, திருப்பூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய மாவட்ட தோட்டக்கலைத்துறையினரால் ரோஜா மலர்களை கொண்டு வடிவங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும், இக்கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளை குதுகலிக்கும் விதமாக தோட்டக்கலைத்துறையின் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
17வது ரோஜா கண்காட்சியானது இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
உதகை மலர்க் காட்சி தொடக்க விழாவையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு மே மாதம் 20 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேர்வுகள் மட்டும் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.