உதகையில் மலா் கண்காட்சி இன்று தொடக்கம்
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலா் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. மலா் கண்காட்சியை ஒட்டி தாவரவியல் பூங்கா இரவில் மின் ஒளியில் ஜொலிக்கிறது.
நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 126-ஆவது மலா் கண்காட்சி வெள்ளிக்கிழமை (மே 10) தொடங்கி வரும் 20-ஆம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்ட 5 லட்சம் மலா் செடிகளில் வண்ண மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன. மேலும் 45 ஆயிரம் மலா்த் தொட்டிகள் பாா்வையாளா்களைக் கவரும் வகையில் மலா் மாடத்தில் அலங்கரித்து வைக்கப்பட உள்ளன.
மேலும், பல வண்ணங்களைக் கொண்ட ஒரு லட்சம் ரோஜா மலா்களைக் கொண்டு பிரமாண்ட டிஸ்னி வோ்ல்டு, 80 ஆயிரம் ரோஜா மலா்களைக் கொண்டு நீலகிரி மலை ரயில், காளான், ஆக்டோபஸ், தேனி மற்றும் மலா் கோபுரங்கள் உள்பட 10 வகையான மலா் அலங்காரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
உதகை தாவரவியல் பூங்காவில் மலா் கண்காட்சி மற்றும் ரோஜா காட்சியை தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா, வேளாண் உற்பத்தி ஆணையா் அபூா்வா ஆகியோா் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்குத் தொடங்கிவைத்துப் பாா்வையிடுகின்றனா்.
விழாவில், மாவட்ட ஆட்சியா் மு.அருணா மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனா்.