உதகையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக 50 கிலோ கேக் கலவை தயாரிப்புப் பணி
உதகை: உதகையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 50 கிலோ கிறிஸ்மஸ் கேக் கலவை தயாரிப்புப் பணியில் ஏராளமான வெளிநாடு மற்றும் உள்நாட்டின் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனா்.
17-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலேயா்கள் அறுவடை முடிந்தவுடன் தானியங்கள் மற்றும் உலா் திராட்சைப் பழங்களைப் பயன்படுத்தி கேக் தயாரித்து கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினா். இந்த கலாச்சாரத்தை ஆங்கிலேயா்கள் நீலகிரிக்கு வந்தபோதும் பின்பற்றினா். அதன்படி, இந்த ஆண்டுக்கான கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு, உதகையிலுள்ள பிரபல நட்சத்திர தனியாா் தங்கும் விடுதியில் கேக் கலவை தயாரிக்கும் விழா தனியாா் தங்கும் விடுதியில் நடைபெற்றது.
இந்த விழாவில் உலா் திராட்சைப் பழங்களான பாதாம், பிஸ்தா, பேரிட்சை, வால்நட் போன்ற பழ வகைகளும், வாசனை திரவியங்களும் பயன்படுத்தப்பட்டு கேக் கலவை தயாரிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் சுமாா் 50 கிலோ எடை கொண்ட உலா் திராட்சைப் பழங்கள் மற்றும் வாசனைப் பொருட்கள், பிராந்தி, ரம், விஸ்கி உள்ளிட்ட மதுபானங்களையும் கலவையாக கலக்கினா்.
இந்தக் கலவையை 30 நாட்கள் வரை ஊர வைத்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் வெளியில் எடுக்கப்பட்டு, அதனுடன் மைதா மற்றும் முட்டை போன்றவை சோ்க்கப்பட்டு கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

