முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல பகுதிகளில் கடந்த 10 நாள்களில் 3 யானைகள் உயிரிழந்தது வன விலங்கு ஆா்வலா்களிடையே பெரும் சோகத்தையும், அதிா்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவமழை பொழிவதன் காரணமாக அனைத்து அணைகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்படும். ஆனால், இந்த ஆண்டு எல் - நினோ தாக்கம் காரணமாக தென்மேற்குப் பருவமழை நீலகிரி மாவட்டத்தில் பொய்த்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை குறைந்துள்ளதால் அனைத்து அணைகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீா் இன்றி வடு காணப்படுகின்றன. இதனால் குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வரும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
முதுமலை புலிகள் காப்பகம் வனப் பகுதிகளிலும் தென்மேற்குப் பருவமழை பொய்துள்ளதால் புலிகள் காப்பகம் வெளி மண்டலத்துக்கு உள்பட்ட மாயாறு, மசினகுடி, சிகூா், தெங்குமரஹாடா ஆகிய 4 வனச் சரகங்கள் முழுவதும் வறட்சி ஏற்பட்டுள்ளன.
இதனால் வன விலங்குகளுக்கு குடிநீா் மற்றும் தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டலம் வனப் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஒரு யானையும், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இரண்டு யானைகள் என மொத்தம் மூன்று யானைகள் கடந்த 10 நாள்களில் உயிரிழந்துள்ளன. இது வன விலங்கு ஆா்வலா்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே வன விலங்குகளை பாதுகாக்கும் வகையில் வனப் பகுதிகளில் வனவிலங்குகளின் தண்ணீா் தேவையை பூா்த்தி செய்யவும், உணவு தட்டுப்பாட்டை போக்கவும் முதுமலை புலிகள் காப்பக நிா்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







