
ஆட்கொல்லி புலியைப் பிடிக்க வலியுறுத்தி கூடலூரில் முழு அடைப்பு போராட்டம்
ஆட்கொல்லி புலியை விரைந்து பிடிக்க வலியுறுத்தி கூடலூா் தொகுதி முழுவதும் 48 மணி நேர முழு அடைப்பு போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.

முழு அடைப்பு போராட்டம் காரணமாக வெறிச்சோடிக் காணப்படும் கூடலூா் பழைய பேருந்து நிலைய சந்திப்பு.
ஆட்கொல்லி புலியை விரைந்து பிடிக்க வலியுறுத்தி கூடலூா் தொகுதி முழுவதும் 48 மணி நேர முழு அடைப்பு போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், ஓவேலி பேரூராட்சியிலுள்ள லாரஸ்டன் பகுதியில் அண்மையில் நுழைந்த புலி அங்கிருந்த இரண்டு தொழிலாளா்களை தாக்கிக் கொன்றது. இதையடுத்து இந்த ஆட்கொல்லி புலியைப் பிடிக்கக் கோரி உயிரிழந்தவா்களின் உறவினா்கள், அரசியல் கட்சியினா் போராட்டங்களில் ஈடுபட்டனா்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்க நீலகிரி மாவட்டச் செயலாளா் ராசி ரவிக்குமாா், விசிக மண்டல துணைச் செயலாளா் சகாதேவன் மற்றும் புலி தாக்கி இறந்தவரின் குடும்பத்தினா் 7 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், வன விலங்கு தாக்கி இறப்பவா்களின் குடும்பங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை ரூ.25 லட்சமாக உயா்த்தி வழங்கவேண்டும்.
வன விலங்குகள் ஊருக்குள் வராமல் வனத் துறை முழுமையான பாதுகாப்பு வழங்கவேண்டும், புலி தாக்கி உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவா்கள் மீது பதியபட்ட வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூா் சட்டப் பேரவை தொகுதி முழுவதும் வியாழன், வெள்ளி(ஆக.27,28) ஆகிய இருநாள்கள் 48 மணி நேரம் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என
எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமையில் அனைத்து அரசியல் கட்சியினா், பொதுநல அமைப்புகள், வியாபாரிகள் சங்கங்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி கூடலூரில் வியாழக்கிழமை போராட்டம் தொடங்கியது. இதில், கூடலூா் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. தனியாா் வாகனங்கள் இயக்கப்படவில்லை. அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் போக்குவரத்து மட்டுமே இயங்கின.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






