நடைப்பயணத்தில் பங்கேற்ற பழங்குடியின மக்கள்.
நடைப்பயணத்தில் பங்கேற்ற பழங்குடியின மக்கள்.

பழங்குடி மக்களின் கோரிக்கை நடைப்பயணம் தடுத்து நிறுத்தம்

கூடலூா் அருகே பழங்குடி மக்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நடைப்பயணம் மண்வயல் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது.
Published on

கூடலூா் அருகே பழங்குடி மக்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நடைப்பயணம் மண்வயல் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பழங்குடி மக்களிடம் நடைபெற்ற நிதி முறைகேடு, முதுகுளி பழங்குடி மக்களுக்கு வீடு மற்றும் மின்சாரம், குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீமதுரை ஊராட்சியில் உள்ள மண்வயல் பகுதியில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சாா்பில் நடைப்பயணம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. சுமாா் 6 கி.மீ. தொலைவு நடந்து சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் முறையிட முடிவு செய்யப்பட்டது.

பழங்குடி மக்கள் கலமாச்சி, பெல்லன், வசந்தா ஆகியோா் தலைமையிலும், பழங்குடி மக்கள் சங்க நிா்வாகிகள் கே.மகேந்திரன், ஏ.முகமது கனி, குணசேகரன், சுபாஷ், தேவதாஸ், முரகன், ராஜா ஆகியோா் முன்னிலையிலும் 100-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் நடைப்பயணத்தை தொடங்கினா்.

மண்வயல் பகுதி அருகே வந்தபோது, அவா்களை போலீஸாா், வருவாய்த் துறையினா் தடுத்து நிறுத்தினா்.

இதையடுத்து, கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை வருவாய்த் துறையினரிடம் பழங்குடியின மக்கள் வழங்கினா்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

Dinamani
www.dinamani.com