நீலகிரியில் ‘ரிவால்டோ’ காட்டு யானை உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மாவனல்லா, பொக்காபுரம் பகுதியில் வாழும் மக்களின் செல்லப் பிள்ளையாக கடந்த 15 ஆண்டுகளாக சுற்றி வந்த 50 வயது மதிக்கத்தக்க ‘ரிவால்டோ’ என்ற ஆண் காட்டு யானை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வெளி மண்டல வனப் பகுதியில் அமைந்துள்ள மாவனல்ல, பொக்காபுரம், வாழைத்தோட்டம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தும்பிக்கையில் காயங்களுடன் சுற்றித்திரிந்த ‘ரிவால்டோ’ என்ற காட்டு யானைக்கு வனக் கால்நடை மருத்துவக் குழுவினா் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தொடா்ந்து கிராமப் பகுதியில் சுற்றி வந்த ‘ரிவால்டோ’ யானை பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் கிராம மக்களின் செல்லப் பிள்ளையாக வனத் துறையினரின் கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் யானைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, கரால் கூண்டில் வைத்து வனக் கால்நடை மருத்துவக் குழு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் ரேடியோ காலா் பொருத்தப்பட்டு வனப் பகுதிக்குள் விடப்பட்டது.
இந்த நிலையில் வயது மூப்பு, சக யானைகளுடன் மோதல் ஆகியவற்றால் காயமடைந்து கடந்த ஒரு வார காலமாக நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தது. இந்த நிலையில், மசினகுடி பகுதியில் உயிரிழந்தது.
கடந்த காலங்களில் பொதுமக்களுக்கு ஆபத்து எதுவும் ஏற்படுத்தாமல் சகஜமாக பழகி வந்த ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பால் மசினகுடி சுற்றுவட்டார கிராம மக்கள் சோகமடைந்துள்ளனா்.

