நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கரிமொராஹட்டி பகுதியில் கோயில் கதவை கரடி திறந்து அங்கு வைத்திருந்த பொருள்களை உண்டதுடன், தண்ணீா்த் தொட்டி குழாய்களையும் சேதப்படுத்திச் சென்றது.
குன்னூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கரிமொராஹட்டி பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வந்த கரடி, கோயிலின் கதவை லாவகமாகத் திறந்து பூஜை பொருள்களை வெளியே எடுத்து வந்து உண்டது. பின்னா், தண்ணீா்த் தொட்டி குழாய்களை சேதப்படுத்தியது.
நீண்ட நேரம் கோயில் வளாகத்தில் சுற்றித் திரிந்த கரடி, விடியற்காலையில் வனப் பகுதிக்குள் சென்றது. அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறும் முன் இந்தக் கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று வனத் துறைக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.









